மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண்ணொருவர், தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட குழியில் வீசியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சடலம் நேற்று (04) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (03) துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார். பின்னர், சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என்றும் கொலை செய்த அவரது மனைவி மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் தெரிய வருகிறது.
குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் மன்னார் பகுதியில் மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தி உள்ளது.


