இலங்கையில் மீண்டுமொரு அரகலய எதிர்பார்க்க முடியாது: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு
இலங்கையில் அமெரிக்க தூதரக ஈடுபாடு இல்லாததால் மீண்டும் மற்றுமொரு அரகலய என்ற போராட்டத்தை எதிர்பார்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள மக்கள் தற்போது முன்னரை விட மிகவும் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் வற் வரி அதிகரிப்பால், அடுத்த ஆண்டு நிலைமை மோசமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினை
எனினும் இனி அரகலய என்ற போராட்டம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தற்போது அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஆடைக்கண்காட்சிகளில் அதிகமாக பங்கேற்கிறார் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்ட யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களை இப்போது விருந்துகளில் மட்டுமே பார்க்க முடியும் என்று வீரவன்ச கூறியுள்ளார்.
அவர்கள் தெருக்களில் இறங்கவில்லை. யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களை காணமுடியவில்லை. அவர்கள் விருந்துகளில் நடனமாடுகிறார்கள்.
எனவே ஜூலியின் நிகழ்ச்சி நிரலே நடைமுறையில் இருக்கிறதே தவிர, மக்கள் அழுத்தத்தில் இருக்கிறார்களா என்பது முக்கியமல்ல என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
