அஸாத் சாலி விடுதலை குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி உத்தரவு
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு (Azad Sally) எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நிறைவு செய்யப்பட்டிருந்தன.
பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு அஸாத் சாலி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன (Maithri Gunaratne) கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 2ஆம் திகதி உத்தரவிட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா (Amal Ranaraja) தீர்மானித்துள்ளார்.
தாம் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள சட்டங்களை மாத்திரமே ஏற்றுக் கொள்வதாகவும், நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் குறித்து பொருட்படுத்துவதில்லை எனவும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி அஸாத் சாலி பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமிழைத்துள்ளார் என்று குறிப்பிட்டு சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.