இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரம்: அனைத்து சுற்றுலா வழிகளும் முடக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ எரிமலை தேசிய பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை முதல் பரவி வரும் இந்தக் காட்டுத்தீ, எரிமலையின் பள்ளப் பகுதியைச் சுற்றி இதுவரை சுமார் 176 ஹெக்டேயர் (434 ஏக்கர்) நிலப்பரப்பை எரித்து சாம்பலாக்கியுள்ளது.
வியாழக்கிழமை வரை 60 ஹெக்டேயராக இருந்த தீப்பரவல், தற்போது மிகவும் வேகமாகவும் விரிவடைந்துள்ளது.
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து - இருவர் பலி
தீ விபத்து
பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சனிக்கிழமை மாலை முதல் இந்த மூடல் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்தவர்கள் பயண திகதியை மாற்றிக்கொள்ள அல்லது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும் ட்ரோன் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கிழக்கு ஜாவா பேரிடர் மேலாண்மை முகவரகம் தெரிவித்துள்ளது.
மலைச்சரிவுகளில் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் போதிலும், இதுவரை எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.