இலங்கையை முடக்க ஜனாதிபதி கோட்டபாய இணக்கம் வெளியிட்டது ஏன்?
இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் அரசியலுக்கு அப்பால் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என மஹாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு திறந்திருந்த போது மூடுமாறு அழுத்தம் பிரயோகித்த சிலர் நாடு முடக்கப்பட்டதன் பின்னர் அதனைத் திறக்குமாறு கோருவது மக்களுக்காக அன்றி அரசியல் நோக்கத்திற்காகவே என மஹாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
உலகம் தொற்று நிலைக்கு முகங்கொடுத்துள்ள இந்தத் தருணத்தில் ஜனாதிபதி, சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறையினரை வலுப்படுத்த வேண்டியது மக்களின் கடமையாகும் என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டிறுவே உபாலி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சங்கநாயக்கர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை விதித்தார். ஜனாதிபதி நாட்டின் நலனுக்காக தீர்மானம் மேற்கொள்ளும் போது சிலர் அரசியல் நோக்கத்திற்காக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு மூடப்படும் போது பொருளாதார ரீதியில் பாரிய இழப்புகள் ஏற்படுமென மல்வத்து பீட அனுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே சிறி விமலதர்ம தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
