லக்னோவை கடைசி ஓவரில் வீழ்த்தி டெல்லி வெற்றிபெற காரணமான அசுதோஷ் சர்மா யார்..!
ஐபிஎல்லின் 4ஆவது போட்டி நேற்றையதினம்(24) விசாகப்பட்டினத்தில் உள்ள டொக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இந்தபோட்டியில் டெல்லி கேபிடெல்ஸ் அணியும் லக்னோ ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.
லக்னோ அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி அணி முதலில்ல பந்துவீச்சை தேர்வுசெய்தது.
[SFDA5P]
இதற்கமைய களமிறங்கிய லக்னோ ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை குவித்தது. நிக்கலஸ் பூரன் 30 பந்தில் 75 ஓட்டங்களும், மிச்சேல் மார்ஷ் 36 பந்தில் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
டெல்லி அணி
210 ஓட்டங்கள் என்ற இமால இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
விப்ராஜ் 15 பந்தில் 39 ஓட்டங்கள் ஸ்டப்ஸ் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தனர். லக்னோ சார்பில் ஷர்துல் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதிரடி ஆட்டம்
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின்(Ashutosh sharma) அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம்.
ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த டெல்லி அணியில் கடைசி நேரத்தில் விக்கெட்கள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் 18.3 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது.
கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், 9 பந்துகளில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அந்த சூழலில் பயப்படாமல் களத்தில் நின்ற அசுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடு 31 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து 19.3 ஓவர்களில் அணியை வெற்றிபெற வைத்துவிட்டார்.
அசுதோஷ் சர்மா ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கினாலும் (20 பந்துகளில் 20 ஓட்டங்கள்), பின்னர் அதிரடியாக ஆடி கடைசி 11 பந்துகளில் 46 ஓட்டங்கள் விளாசினார். இவரது ஆட்டம் டெல்லி அணியின் வரலாற்றில் மிக உயர்ந்த சேஸிங் ஆக பதிவாகியுள்ளது.
யார் இந்த அசுதோஷ் சர்மா
அசுதோஷ் சர்மா தன்னுடைய சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்து வந்துள்ளார்.
அவரது தந்தை ராம் பாபு ஷர்மா ஒரு அரச மருத்துவமனையில் ஊழியரான பணியாற்றியுள்ளார்.
குடும்பம் எளிய பொருளாதார பின்னணியைச் சேர்ந்தது என்றாலும்,அசுதோஷ் சர்மாவின் கிரிக்கெட் மீதான ஆர்வத்திற்கு அவரது தந்தை ஆதரவு கொடுத்துள்ளார்.
அவரது சொந்த ஊரில் போதுமான வாய்ப்புகள் இல்லாததால், கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக அவர் இந்தூருக்கு சென்றார். அங்கு அவர் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (Madhya Pradesh Cricket Association – MPCA) குடியிருப்பு அகெடமியில் சேர்ந்தார்.
இந்தூருக்கு சென்றபோது அசுதோஷ் சர்மாவுக்கு 8 வயது தான். அவர் முன்னாள் இந்திய வீரர் அமய் குராசியாவின் பயிற்சியின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆரம்ப காலம் எளிதாக இல்லை.
ஆரம்பத்தில் விமர்சனங்கள்
பொருளாதார சிக்கல்கள் காரணமாக, அவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூட பணம் இல்லை. சில சமயங்களில் அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலையில் இருந்துள்ளார்.
இதனால், அவர் சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க சில வேலைகளை செய்தார்.
அதில் அம்பயரிங் செய்வதும், மற்றவர்களின் துணிகளை துவைப்பதும் அடங்கும்.
இந்த கஷ்டங்கள் பொறுத்துக்கொண்டு இருந்த அவருக்கு இந்தூரில் வயது குழு போட்டிகளில் (age-group cricket) போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது அதில் தனது திறமையை காட்டினார்.
அதனை தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச அணிக்காக 2017-18 சோனல் டி20 லீக் (Zonal T20 League) போட்டியில் விளையாடியுள்ளார்.
இது அவரது டி20 அறிமுகமாகும். பின்னர், 2019 ஒக்டோபர் 16 அன்று, 2019-20 விஜய் ஹசாரே டிரொபியில் மத்தியப் பிரதேச அணிக்காக லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
மத்தியப் பிரதேச அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால், அசுதோஷ் சர்மா தொடருந்து அணிக்கு மாறினார். இந்த மாற்றம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொடருந்து அணியில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன, மேலும் அவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது.
இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியில் 2024 ஐபிஎல் சீசனில் விளையாடினார். அதன்பிறகு தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 3.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை பெரியது என ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தாலும் அந்த விமர்சனங்களை நேற்று நடந்த போட்டியின் மூலம் தீர்த்து டெல்லி அணியின் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
