சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு விரைவில்
சீனாவின் சினோபார்ம் கோவிட் தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது முடிவை வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கத் தயாராகி வருகிறது.
இதனையடுத்து அடுத்த வாரத்திற்குள் சீனா தயாரிக்கும் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார அமைப்புடன் நெருங்கிய தரப்பு தகவல்களின்படி, அந்த அமைப்பு தனது முடிவை வலுவாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சினோபார்ம் தொடர்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக சுகாதார மைய அறிக்கையில், 18 முதல் 59 வயதிற்குட்பட்ட வயதினருக்கு உயர்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தது.
ஆனால் இது 60 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு குறைந்த அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தது.
எனவே இலங்கை அரசாங்கம் சினோர்பாம் தடுப்பூசியை 59 வயதினர் வரையில் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் உள்ள களஞ்சியங்களில் ஆயிரக்கணக்கான சினோபார்ம் தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்கும் மேலான காலாவதி திகதியை கொண்ட நிலையில் இருப்பில் உள்ளன.
இந்தநிலையில் சினோபார்ம் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தவுடன், இலங்கை அரசாங்கம் அவற்றை பொதுமக்களுக்கு வழங்க ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ஏற்கனவே 280 மில்லியன் மக்கள் சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான சினோஃபார்ம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் தடுப்பூசிகளை செலுத்த ஆரம்பித்துள்ளன.
லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கில் மற்றும் ஐரோப்பாவில் செர்பியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளும் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
40க்கும் மேற்பட்ட நாடுகள் அவசரகால பயன்பாட்டிற்காக சினோபார்முக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதுவரை ஒரு கடுமையான பக்க விளைவு கூட தெரிவிக்கப்படவில்லை.
எனினும் இலங்கையில் 6 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக
கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.