பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் உள்ள குறைந்தபட்ச பாதுகாப்பு நடைமுறைகளிலான பின்னோக்கிய நகர்வு!
புத்தாண்டின் ஆரம்ப தருணத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபை (PSTA) ஏதோ ஒரு சாதனையைச் செய்துவிட்டு தனது முதுகைத் தானே தட்டிக்கொள்வது போன்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் இலங்கை மக்களின் முன்னிலையில் சமர்ப்பித்திருப்பது வியப்புக்குரியது.
இச்சட்ட வரைவின் உள்ளடக்கம் பல முக்கிய இடங்களில் குழப்பமானதாகவும் பிழையானதாகவும் இருப்பதால் அதைப் பாராட்ட முடியாதுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய ஆவணத்தைப் பரிசீலிக்கத் தொடங்கியபோது நான் வினவிய அதே கேள்விக்கு மீண்டும் வருகிறேன்.
நாட்டு மக்களின் சுதந்திரத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் இடையில் ‘சமநிலையைப்’ பேணுவது பற்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்து வரும் நிலையில், அதிருப்தியை உருவாக்கும் இந்தச் சட்ட ஆவணம் அரசாங்கத் தரப்பினது மோசமடைந்த குழப்பத்தின் விளைவா? பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக மாற்றீடு ஒன்றை முன்வைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் வரைவு, அத்தகைய எந்தவொரு ‘சமநிலையையும்’ கொண்டிருக்கவில்லை என்று சொல்வதே மிகப்பொருத்தமானது.
சட்ட வரைவு
இவ்வரைவின் முன்னோடியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (2023) தொடர்பாக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களுக்கு மாத்திரம் இந்த வரைவு தனது திருத்தங்களை மட்டுப்படுத்தியுள்ளது என வாதிடுவது ஒரு சரியான நியாயப்படுத்தல் ஆகாது. ஒரு சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான தன்மையை ஆராயும்போது, நீதிமன்றம் கொள்கை வகுத்தலிலோ அல்லது சட்ட வரைவை உருவாக்குவதிலோ ஈடுபடுவதில்லை.

மாறாக, தனது சட்டமூலங்கள் தனது மக்கள் ஆணையைப் பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோன்று, இது திருத்தங்களுக்கு உட்பட்ட ஒரு ‘செயற்பாட்டு வரைவு’ என விளக்குவதும் ஒரு நியாயப்படுத்தலாக அமையாது.
தெளிவாகச் சொல்வதென்றால், இந்த வரைவில் உள்ள ஏராளமான சிக்கலான உட்பிரிவுகளைக் கருத்திற் கொள்ளும்போது, அது அவ்வாறான திருத்தங்களுக்கு இடமளிக்கக் கூடியதல்ல. உண்மையில், இதற்கு முந்தைய சட்டமூலத்தில் காணப்பட்ட ஒரு சில பாராட்டுக்குரிய அம்சங்களில் இருந்து கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது பாரிய கவலைகளைத் தோற்றுவிக்கின்றன. அவற்றில் சில ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான முன்னெச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன
தனிநபர்களுக்கு எதிராகக் மட்டுப்படுத்தல் உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு வழங்கப்படும் சுதந்திரம், உண்மையிலேயே ஒரு கரிசனைக்குரிய விடயமாகத் தொடர்கிறது. நியாயமாகச் சொல்வதானால், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி காலத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலம், குறைந்தது இவ்விடயத்திலாவது சட்டவாட்சிக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்குவதை வெளிக்காட்டியது.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் மற்றும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிகை முன்வைப்பதன் விளைவாகவே, இந்த அதிகாரத்தைப் ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு நடைமுறைகளை புறந்தள்ளிவிட்டு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் 64 (1) ஆம் உட்பிரிவானது, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்குக் குறையாத எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இந்த அசாதாரணமான அதிகாரத்தை வழங்குகிறது.
ஆளொருவர் ‘பயங்கரவாதக் குற்றமொன்றை’ புரிவதற்கு ஆயத்தமாகிறார் என ‘நம்புவதற்கு நியாயமான காரணங்கள்’ இருக்க வேண்டும் என்பது மட்டுமே இதற்கான நிபந்தனையாகும். குறித்த நோக்கத்துக்காக இந்த ஆணைகள் ‘அவசியமானவை’ என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவற்றைப் பிறப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தில் காணப்பட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கு நீக்கப்பட்டுள்ளன.
தடை உத்தரவுகளைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தைப் பின்பற்றினாலும் மேலதிக தடைகளை உள்ளடக்கியுள்ளது.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலமானது ஆரம்பத்தில் ஒரு வருட காலத்திற்கு மாத்திரமே தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது. அங்கு தானாகவே காலம் நீடிக்கப்படும் முறை இருக்கவில்லை. மேலதிக காலப்பகுதிகளுக்கு அதனை நீடிக்கும்போது, ‘சமகாலத்தின் நம்பகமான தகவல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை’ ஜனாதிபதி கருத்திற்கொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு நீடிக்கப்படும் காலமும் ஒரு தடவையில் ஓராண்டு காலத்துக்கு மிகாததாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
ஊடகங்கள் மீதான கவலைக்குரிய தாக்கம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் கீழ் அது மாற்றப்பட்டுள்ளது. உட்பிரிவு 63 (6) மிகச் சுருக்கமாக, ‘இந்தப்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு தடை உத்தரவு அது இரத்துச் செய்யப்படும் வரை செல்லுபடியாகும்’ என பிரகடனப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால எல்லை எதுவும் இல்லை.

இத்தகைய உத்தரவுகள், மாறிவரும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அவ்வப்போது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டிய தேவைப்பாடின்றி எல்லையற்று நீடிக்கின்றன. உட்பிரிவு 6 உடன் சேர்த்து வாசிக்கும்போது, இங்கு கரிசனத்துக்குரிய சில காரணங்கள் உள்ளன. இது, ஏனையவற்றுடன் ‘தடைசெய்யப்பட்ட அமைப்பின் சார்பில் தகவல் பரப்புவதை' ஒரு குற்றமாக்குகிறது.
இது அத்தகைய அமைப்புகள் குறித்த நியாயமான செய்தி அறிக்கையிடலையும் பாதிக்குமா?
2018 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவும் ஒரு தடைசெய்யப்பட்ட ‘பயங்கரவாத அமைப்புக்கு’ பணம் வழங்குவது உட்பட (உட்பிரிவு 10), அத்தகைய அமைப்புகளுடன் தொடர்புடைய பல்வேறு குற்றங்களை உள்ளடக்கியிருந்தது.
ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவும் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் ஆகிய இரண்டையும் ஒப்பிடுகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பலவீனமாக உள்ளது. உதாரணமாக, ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு விதிக்கப்படும் தடைகளை நிச்சயமாக எவரும் குறை கூற முடியாது. ஆனால், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் வரம்பை வகுப்பதில் காட்டப்பட்டுள்ள தேவையற்ற விரிவாக்கம் கவலையளிக்கிறது.
அத்துடன்ப், உட்பிரிவு 6 ஆனது, ஒரு ‘தடைசெய்யப்பட்ட அமைப்பு’ தொடர்பாகத் தனது தொழின்முறைக் கடமைகளை ஆற்றும் ஒரு சட்டத்தரணியைப் பாதுகாக்கும் நிபந்தனையைக் கொண்டிருந்தாலும், அத்தகைய அமைப்புகள் குறித்த ஊடக அறிக்கையிடலுக்கு அவ்வாறான எந்தவொரு சலுகையும் வழங்கவில்லை.
இலங்கைப் பிரஜைகளுக்கான அதன் கடமைகளுக்கு அப்பாற்பட்டு, இத்தகைய பிற்போக்கான மாற்றங்கள் சர்வதேச ரீதியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?
சர்வதேச சிறந்த நடைமுறைகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு ஒரு மாற்றீட்டைக் கொண்டு வரும்போது, இலங்கை உலகளாவிய சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளது.
GSP Plus முன்னுரிமை வணிக வசதிக்கான தொடர்ச்சியான அணுகலை உறுதிப்படுத்த இந்த உத்தரவாதங்கள் அவசியமானவை. நாம் கையொப்பமிட்டுள்ள முக்கியமான மனித உரிமைகள் உடன்படிக்கைகளை ‘திறம்பட நடைமுறைப்படுத்தாதது’ உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த வசதி 2010 ஆம் ஆண்டில் ஒருமுறை இரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்குறுதியின் ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவது என்பது ‘குறித்த நோக்கத்துக்கு அவசியமானதாகவும்’ அதற்கு விகித சமனானதாகவும் இருக்க வேண்டும் என்று சர்வதேச சட்ட நியமம் வலியுறுத்துகிறது. இதனால்தான், அதிகாரங்களை வழங்கும் போது பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலம் பல நிலைகளில் அந்தத் தேவைப்பாட்டை கொண்டு வந்தது.
இந்தக் கோட்பாடானது கில்லன் மற்றும் குயின்டன் எதிர் ஐக்கிய இராச்சியம் (2010) என்ற வழக்கின் மூலம் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இதில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ‘தடுத்து நிறுத்தி சோதனையிடுவதற்கான’ அதிகாரங்களை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (ECHR) இரத்துச் செய்தது.
ஐக்கிய இராச்சியத்தின் 2000 ஆம் ஆண்டின் பயங்கரவாதச் சட்டத்தின் (தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது) 44 மற்றும் 45 ஆம் பிரிவுகளின் கீழ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ‘அதிகாரமளித்தல்’ ஊடாக ‘பயங்கரவாதச் செயல்களை’ தடுப்பதற்கு ‘உகந்தது’ எனக் கருதப்படும்போது பொலிஸார் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும். அதன்படி, ‘ஆயுதக் கண்காட்சி சந்தைக்கு எதிரான ஒரு போராட்டத்துக்கு அருகில் வைத்து உள்ளூர் பொலிஸாரால் ‘தடுத்து நிறுத்தி சோதனையிடப்பட்ட’ ஒரு யுத்த எதிர்ப்புப் ஆர்ப்பாட்டக்காரரும் ஓர் ஊடகவியலாளரும், தமது மேன்முறையீடுகள் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் பிரபுக்கள் சபையினால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாடினர்.
திட்டவட்டமான மொழிப்பிரயோகத்தின் முக்கியத்துவம்
பொலிஸார் பயன்படுத்திய அதிகாரங்கள் போதுமான அளவு வரையறுக்கப்படவோ அல்லது போதுமான சட்டப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், அவை ‘சட்டத்துக்கு அமைவாக’ இருக்கவில்லை எனவும், சாசனத்தின் 8 ஆம் பிரிவை (அந்தரங்க வாழ்க்கையை மதிப்பதற்கான உரிமை) மீறுவதாகவும் தீர்ப்பளித்தது.

இதன் விளைவாக, அப்போதைய பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துவது வெறுமனே ‘உகந்தது’ என்று காணப்படும்போது அல்லாமல், அது ‘அவசியமானது’ என்று காணப்படும்போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கடுமையான நியமத்தை நடைமுறைப்படுத்தினார்.
இந்த வழக்கு இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய திட்டவட்டமான சட்ட மொழிப்பிரயோகத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உதாரணமாக, பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுக்காக்கும் சட்ட வரைவின் 58ஆம் உட்பிரிவானது, விளக்கமறியலில் உள்ள ஒரு நபரை விசாரணை முடியும் வரை ‘ஏதேனும் ஒரு சட்டபூர்வமான அதிகாரமுள்ள நிறுவனத்தில்’ காவலில் வைக்குமாறு உத்தரவிட பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.
பொது மக்கள் பாதுகாப்பு அல்லது பொது அமைதியின் நலன் கருதி அவ்வாறு செய்வது ‘அவசியமானது’ அல்லது ‘உகந்தது’ என செயலாளர் கருதும் பட்சத்தில் இந்த உத்தரவைப் பிறப்பிக்கலாம். பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு ‘குற்றஞ்சாட்டப்பட்டவரது உயிருக்கு பாரதூரமான தீங்கு விளைவிக்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் இடங்களில்...’ என்ற மற்றொரு அம்சத்தையும் சேர்க்கிறது. எது எப்படியிருந்தாலும், ‘உகந்தது’ போன்ற சொற்கள் நீக்கப்பட வேண்டும். ‘சமநிலையான’ பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் பின்னணியில் இது போன்றவற்றுக்கு இடமில்லை. =
ஆனால் ஒட்டுமொத்தமாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் பின்னாலுள்ள உண்மையான ‘உள்நோக்கம்’ என்ன? தனியார் ஊடக அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக அமைச்சர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்கள் போன்ற அதே முறையில், சிவில் ஒடுக்குமுறையை நோக்கிய திட்டமிடப்பட்ட முயற்சி ஏதேனும் இங்கு உள்ளதா?
ஒடுக்குமுறைச் சட்டங்கள் கர்மவினையாக மாறக்கூடும்
இது ஒரு ‘நல்ல பொலிஸ்காரர், கெட்ட பொலிஸ்காரர்’ மூலோபாயத்துக்குச் சமமானது.
அதாவது, ஜனாதிபதி தீய உள்நோக்கம் இல்லை என்று உறுதியளிக்க, அமைச்சர்களோ ‘மோசமான’ சட்டங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் அறிக்கைகளுக்கு உண்மையாக இருங்கள் என விடுக்கும் பயனற்ற கோரிக்கைகளைத் தாண்டி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு கசப்பான உண்மை உள்ளது. எந்தவொரு ஆட்சியும் நிரந்தரமாக நீடிப்பதில்லை.
ஒரு அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் ஒடுக்குமுறைச் சட்டங்கள், அதற்குப் பின்னர் வரும் அரசாங்கத்தினால் அதே சட்டங்களை முதலில் கொண்டுவந்த தலைவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் ஒடுக்குமுறையின் அத்திவாரமாக மாறிவிடும். இலங்கையின் வரலாறு இத்தகைய கர்மவினை மற்றும்/அல்லது கவித்துவமான நீதியுடன் தொடர்புபட்ட உதாரணங்களால் நிரம்பியுள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 17 February, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam