சாகர காரியவசத்திற்கு அதிகாரத்தை வழங்கியது யார்? - உதய கம்மன்பில கேள்வி
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டது எனவும் அந்த தீர்மானத்தை அறிவித்ததை மாத்திரமே செய்ததாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கம்மன்பில இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமை நாற்காலியில் அமர்ந்திருந்த வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை குழுவே இந்த தீர்மானத்தை எடுத்தது. நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ச இதற்கு இணங்கினார்.
எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பாக அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் பிரதிநிதியாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் கலந்துக்கொண்டார் எனவும் கம்மன்பில கூறியுள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட சம்பந்தமான பொறுப்பை ஏற்று துறைக்கு பொறுப்பான அமைச்சர் ராஜினாமா செய்ய வேணடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சர் கம்மன்பில, சாகர காரியவசம் இந்த அறிக்கையின் ஊடாக தாக்கியது என்னை அல்ல.
அவரது கட்சியால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரையே தாக்கியுள்ளார். வரலாற்று காலம் முழுவதும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது நிதியமைச்சு.அதனை அறிவிக்கும் ஆபத்தான காரியத்தை நான் பொறுப்பேற்றேன்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அநத பொறுப்பை ஏற்றேன். எரிபொருள் நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியது நான் என ஒப்புவிக்க முடியுமானால், பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சாகர காரியவசத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் அளவுக்கான அதிகாரத்தை சாகர காரியவசத்திற்கு வழங்கியது யார் என்பதை தேடியறிய வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.