எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே! நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என்று நாடு திரும்பிய கையோடு பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) பிற்பகல் உரையாற்றும்போதே கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?"
"எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து நான் இன்று அவசரமாக வந்தேன்.அந்தப் பிரேரணை எங்கே?" - என்றும் அவர் சிரித்தபடியே வினா தொடுத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கையெழுத்திடப்படுவதாக அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய கலந்துரையாடல்
உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்ற பிற்பகல் நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார்.

மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களையும் இந்த விஜயத்தின்போது பிரதமர் சந்தித்தார்.
சுவிஸில் உள்ள சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். இலங்கையின் பொருளாதார மீட்சி, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீடு என்பவற்றை இலக்காகக்கொண்டே பிரதமரின் சந்திப்புகள் நடைபெற்றன.
பிரதமருடன் அமைச்சர் அனில் பெர்னாண்டோவும் மாநாட்டில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் சுவிட்சர்லாந்து பயணம் இராஜதந்திர ரீதியில் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆளுங்கட்சியினர் தெரிவித்தனர்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam