அரச ஊழியர்களுக்கான புதன்கிழமை விடுமுறை குறித்து இம்ரான் எம்.பி கண்டனம்
எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள ஒவ்வொரு புதன் கிழமையும் அரச விடுமுறையானது தூரப் பிரதேசங்களிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு மனக் கஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
எனவே, இது குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் இன்று (17) விடுத்துள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி நிலை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அதிகமான அரச உத்தியோகத்தர்கள் தூரப் பிரதேசங்களில் இருந்து பணிக்குச் செல்கின்றனர். இவர்கள் தமது அலுவலகப் பகுதியில் தங்கி இருக்கின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதன் கிழமை விடுமுறை சொந்த பிரதேசங்களில் பணிபுரிவோருக்கு நன்மையளிப்பது போல இவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

இந்த ஒரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தி இவர்களால் தமது வீடுகளுக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாட்டின் நெருக்கடி நிலை குறித்து கவனத்தில் கொண்ட அரசாங்கம் இவ்வாறான உத்தியோகத்தர்களின் நலன் குறித்து கவனத்தில் கொள்ளாது அவர்களைக் கைவிட்டுள்ளது கவலையை ஏற்படுத்துகின்றது.
விடுமுறை
எனவே, அரசாங்கம் இந்த விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்ற வேண்டும். அல்லது தூரப் பிரதேசத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் நன்மை பெரும் வகையில் ஏதாவது திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சகல அரச உத்தியோகத்தர்களும் அரசாங்கத்தினால் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். சிலர் நன்மையடையும் அதேவேளை இன்னும் சிலர் கஸ்டப்படும் நிலை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லையேல் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.