மிகப் பலவீனமான ஆட்சியை முன்னெடுக்கும் அநுர : சஜித் பகிரங்கம்
அண்மைக்கால வரலாற்றில் உருவான மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "பத்து பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தமது வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அவை மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
இன்று, நாடு பயணிக்கும் பாதை தெளிவாகத் தெரிகின்றது. வலுவான அரசுக்குப் பதிலாக, வரலாற்றில் மிகவும் தோன்றிய மிகவும் பலவீனமான அரசே இங்கு காணப்படுகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெளிப்படையான கொள்முதல் முறைகளின்படி இடம்பெற வேண்டும். முதலீட்டாளர்களை அரசு தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
2028 ஆம் ஆண்டளவில் நாம் கடனைச் செலுத்த வேண்டும் என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நாடு செலுத்த வேண்டிய கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டுமானால் அரசு அதிக வருமானத்தையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இலக்குகளையும் அடைய வேண்டும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஒரு நாடாக எம்மால் மீண்டு வர முடியும். இவ்வாறே சென்றால் இன்னுமொரு கடன் மறுசீரமைப்பிற்குச் செல்ல வேண்டி வரும்.
அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட இணக்கப்பாடு மற்றும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஆராயும் பொருளாதார வல்லுநர்கள், அவர்களுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளின் இலக்குகளை நாம் அடையாவிட்டால், மற்றொரு கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த இணக்கப்பாடுகளில் காணப்படும் பலவீனங்களை ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியதுடன் கடந்த அரசு செய்த தவறுகளை இந்த அரசும் முன்னெடுத்து வருகின்றது. பல நிபுணர்கள் ஐ.எம்.எப். ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர்.
அவர்களது பகுப்பாய்வுகளின் பிரகாரம், ஐ.எம்.எப். உடன்படிக்கைக்கு வந்த 59 வீத நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மறுசீரமைப்புக்குச் சென்றுள்ளன என வெளிப்படுத்தியுள்ளனர்.இது இங்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
மற்றொரு கடன் மறுசீரமைப்பை நாடுவது நாட்டுக்கு ஒரு பேரழிவாகும். குறுகிய பிரச்சினைகளை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் ஆதாயம் தேடாது. நாடு குறித்து சிந்தித்தே செயற்பட்டு வருகின்றோம். இந்தத் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, நாம் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம்.
சுதந்திர ஜனநாயக வரலாற்றில் குறுகிய காலத்தில் ஒரு கட்சியாகப் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களையும் வாக்குகளையும் வென்றெடுத்தோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டோம். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் வந்துள்ளது. இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.
கட்சிக்கென்று எந்த உறுப்பினர்களும் இல்லாதே கடந்த மூன்று தேர்தல்களிலும் எமது கட்சி பேட்டியிட்டது. அப்போது இருந்த ஐ.தே.க. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கையோடு ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தனர். அவர்களில் 74 பேர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பதவி பறிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினது அல்லது தொலைபேசி சின்னத்தினது பயணமென்பது தற்காலிகமான பயணமல்ல. இது நெடுந்தூர பயணம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
