எந்த நிபந்தனையும் இன்றி வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்போம்-பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனைகள் இன்றி வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க நிபந்தனைகளையு விதிக்கவில்லை
நாட்டில் காணப்படும் நிலைமையின் அடிப்படையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
மொட்டுக்கட்சியின் உதவியுடனேயே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதனால், இரண்டு தரப்பும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்.
நாங்கள் கட்சி என்ற வகையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கி, நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வழங்கக்கூடிய கூடுதலான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.
ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுடன் பணியாற்றுகிறோம்
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுடன் வேலை செய்கின்றோமே அன்றி எமக்கிடையில் எந்த நிபந்தனைகளும் இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.