அரசியல் குத்துக்கரணத்திற்கு தயாராகி வரும் பிரசன்ன ரணதுங்க?
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக மினுவங்கொடை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் சபையில் மினுவங்கொடை பிரதேச சபைத் தலைவர் மற்றும் நகர சபை தலைவர் உட்பட அவரது பிரதான ஆதரவாளர்கள் 50 பேர் அங்கம் வகிக்கின்றனர். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்னர் இந்த குழுவினரிடம் கருத்துக்களை கேட்டறிவது வழக்கம்.
இரகசிய வாக்கெடுப்பு கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்
2015 ஆம் ஆண்டு மகிந்த காற்று என்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான மேடையில் ஏறுவதற்கு முன்னரும் ரணதுங்க, தனது அரசியல் சபையிடம் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20 ஆம் திகதி மினுவங்கொடை மபோதல பிரதேசத்தில் உள்ள பிரசன்ன ரணதுங்கவின் ஆதவாளர் ஒருவருக்கு சொந்தமான மண்டபத்தில் இந்த இரகசிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அங்கு சென்றிருந்த அரசியல் சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தலைவருடன் முன்நோக்கி செல்வது பொருத்தமானதா அல்லது இதுவரை கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவது நல்லதா என இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அரசியல் சபையின் உறுப்பினர்கள் வாக்களித்த பின்னர், வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. வாக்கெடுப்பின் முடிவுகள் தொடர்பில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு அறிவிக்கப்படும் என அரசியல் சபையினர் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியில் இணைக்கும் அரசியல் நடவடிக்கை முன்னெடுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தற்போது அவர் பிரான்ஸ் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பிலான வாக்குகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை பிரதி அமைப்பாளர் சாகர காரியவசத்திடம் வழங்கி விட்டு, பிரசன்ன ரணதுங்க, வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
அதேவேளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை ஐக்கிய தேசியக்கட்சியில் இணைத்துக்கொள்ளும் அரசியல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.