குயிலின் முட்டையை அடை காப்பது மொட்டுக்கட்சியினர்:பிரசன்ன ரணதுங்க
குயிலின் முட்டையை அடை காப்பது மொட்டுக்கட்சினர் எனவும் அந்த முட்டையை சாப்பிட வரும் நாகங்கள் மற்றும் விரியன் பாம்புகளை கொத்துவோம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணிலின் பொருளாதாரம் காகத்தின் கூட்டில் வளர்ந்த குயில்
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையானது காகத்தின் கூட்டில் வளர்ந்த குயில் குஞ்சை போன்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கடந்த 31 ஆம் திகதி வரவு செலவு தொடர்பான விவாதத்தில் கூறியமைக்கு பதிலளிக்கும் வகையில் பிரசன்ன இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி அனைத்தையும் மறந்து விட்டு, நாடு பற்றி சிந்தித்து, நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எதிர்க்கட்சியினர் அவரை காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலுடன் ஒப்பிடுகின்றனர். பூப்பூத்து புத்தாண்டு பிறக்க போகிறது என்ற முதல் தகவலை எமக்கு குயில்களே வழங்குகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
குயில் முட்டையிட நாங்களே கூட்டை வழங்கினோம்
குயில் முட்டையிடுவதற்கு நாங்கள் எங்களது கூட்டை வழங்கினோம். நாங்கள் விரும்பியே கொடுத்தோம். குயில் என்று அறிந்தே வழங்கினோம். இதனால், நாங்கள் குயிலை கொத்த போவதில்லை.
ஜனாதிபதி முதலில் உங்களுடன் இணைந்தே கூட்டை கட்ட முயற்சித்தார். நீங்களே அவரை கொத்தி விரட்டினீர்கள் எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.