சர்வதேசத்தின் தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! - அரசு திட்டவட்டம்
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பைச் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என்று வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய வெளி விவகார அமைச்சர் பீரிஸ், இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இலங்கை அதன் தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொண்டு, இறையாண்மையுடன் வெற்றியை நோக்கிப் பயணிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்கின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை வெற்றி கொள்வதற்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
இலங்கையின் பிரச்சினைகளை உள்ளக நிறுவனங்களின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றோம் நாட்டு விவகாரங்களை வெளியக நிறுவனங்களுக்குப் பொறுப்புக் கொடுப்பதை அங்கீகரிப்பதில்லை.
ஐ.நா அதன் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய அனைத்து நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.