உக்ரைன் முடக்கப்படவில்லை - அங்கிருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைப்போம்! சுற்றுலாத்துறை அமைச்சர்
உக்ரைன் நாடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்து பொய்யானது எனவும் அரசாங்கம், அந்த நாட்டில் இருந்து தொடர்ந்தும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மாத்திரமே தற்போது தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஏனைய எந்த நாடுகளில் இருந்தும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பிரத்தியோக விமானங்கள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியும். இதன் பின்னர் வர்த்தக விமானங்களுக்கு விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும் புதிதாக வழங்கப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய எவரும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியும் என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உக்ரைன் நாடு முடக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரணதுங்க, உக்ரைன் முடக்கப்படவில்லை. சமூக ஊடகங்களே இதனை கூறுகின்றன. பாடசாலைகள் மாத்திரமே அங்கு மூடப்பட்டுள்ளன. கூட்டங்களை நடத்த முடியாது. இவ்வாறான பிரதான விடயங்கள் மாத்திரமே முடக்கப்பட்டுள்ளன. முழுமையான முடக்கத்திற்கு அந்த நாடு செல்லாது. உலகில் இவ்வாறான பல நாடுகள் இருக்கின்றன. அந்நாடுகளிலும் முழு முடக்கம் அமுல்படுத்தபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.