ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையின் இறுதித் தீர்மானம்
ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் நாளை அல்லது மறுதினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு, ஈரானிய தூதுவர் மற்றும் ஈரானிய அரசாங்கத்துடன் கடந்த சில நாட்களாக நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
'ஐரிஸ் டேனா' (Iris Dana) கப்பலில் இருந்த 32 பேரும், 'ஐரிஸ் புஷர்' (Iris Bushehr) கப்பலில் இருந்த 207 பேரும் மீட்கப்பட்டு தற்போது வெலிசர மற்றும் கொக்கல பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஐரிஸ் டேனா கப்பலில் உயிரிழந்த 84 மாலுமிகளின் உடல்கள், கடந்த 13ஆம் திகதி விசேட விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 4ஆம் திகதி காலி கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 'ஐரிஸ் டேனா' கப்பல் அழிவடைந்தது.

'ஐரிஸ் புஷர்' கப்பலானது இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.