அம்பாறையில் தடைப்பட்டிருந்த குடிநீரை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
அம்பாறை(Ampara) மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீரை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்(K. Kodeeswaran) தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நைனாகாடு பகுதியில் நான்கு இடங்களில் நீர்விநியோக குழாய்கள் உடைப்பெடுத்துள்ளது.
இதன்காரணமாக நீர் விநியோக நடவடிக்கைகள் கடந்த 12நாட்களுக்கு மேலாக பல பகுதிகளுக்கான குடிநீர்விநியோகம் தடைப்பட்டிருந்தது.
தடைப்பட்டிருந்த குடிநீர்
இந்த நிலையில் குறித்த உடைவினை சீர்படுத்தும் செயற்பாடுகள் மந்தகதியில் நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனால் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு தற்போது சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று நைனாகாடு பகுதிக்கு விஜயம் செய்த கோடீஸ்வரன் பணிகளை பார்வையிட்டதுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கைதர் அலி,பொறியியலாளர் மயூரன் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் குடிநீரை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது குறித்த பகுதியில் குடிநீர் விநியோக குழாய்களின் உடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை அல்லது இன்று(8) காலை முதல் குடிநீர் விநியோகத்தினை செய்யமுடியும் என அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





