கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு! வெளியான புதிய அறிவிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் தற்போது நடைமுறையிலுள்ள திட்டமிடப்பட்ட நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனம் செலுத்தியுள்ளது.
தற்போது 18 மணிநேரமாக உள்ள நீர்வெட்டு நேரத்தை 12 அல்லது 8 மணிநேரமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
8 மணிநேரமாக குறைப்பதற்கு நடவடிக்கை
கடும் வறட்சி காரணமாக படுகடை, ஹோமாகம, பாலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை 24 மணிநேர நீர்வெட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

மக்களின் அசௌகரியத்தைக் கருதி அது நேற்று முன் தினம் (3) 18 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 20,000 நீர் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்க சிறப்பு நடவடிக்கை
நீர் விநியோகத்தில் மேலதிகத் தடைகள் ஏற்படும் பட்சத்தில், கொழும்பு மாவட்டத்திற்கு பௌசர்கள் (Bowsers) மூலம் நீர் வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக மற்றைய மாவட்டங்களில் உள்ள நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான நீர் பௌசர்களை கொழும்புக்குக் கொண்டு வர ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.