தண்ணீரூற்றில் வீணாக்கப்பட்ட கிணறு: பொறுப்பற்ற செயலெனச் சுட்டிக்காட்டு
முல்லைத்தீவு - தண்ணீரூற்றில் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் கிணறு ஒன்று வீணாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
நீண்ட காலமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள பயன்பட்டு வந்த வீதியோரமாக உள்ள குழாய்க் கிணறு ஒன்று தொடர்பிலேயே அவதானிப்பாளர்கள் பலரும் தங்கள் விசனத்தை வெளிப்படுத்தி சுட்டிக்காட்டியிருந்தனர்.
தண்ணீரூற்றில் நிலத்தடி நீரினளவு அதிகமாகவும் பல இடங்களில் இது போல் ஊற்றெடுக்கும் நீருள்ள இடங்கள் இருப்பதுடன் இன்று குழாய்க் கிணறு கைவிடப்பட்டுள்ளது வேதனைக்குரிய விடயமாகும் என சமூக விடய ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
குழாய்க்கிணறு
தண்ணீரூற்றில் இருந்து குமுழமுனைக்குச் செல்லும் வீதியில் கற்பகப்பிள்ளையார் ஆலயத்தடிக்குச் செல்லும் முன்னர் வீதியில் உள்ள L வளைவு மற்றொரு பாதையை தன்னோடு இணைக்கும் போது T சந்தி தோன்றுகின்றது.
பொதுமக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த கிணறு அதிகளவு ஊற்று நீரை கொடுப்பது அறியப்படவே பிரதேச சபை மற்றும் உள்ளூர் மக்கள் தங்களுக்கு தேவையான நீரை அதிலிருந்து பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அதிகளவில் பயன்பட்ட இந்தக் கிணறு 2009 க்குப் பின்னர் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தக் கிணற்றை பொதுமக்களோடு இணைந்து இராணுவமும் பயன்படுத்தியதாக அப்பகுதி மூதாட்டியொருவர் குறிப்பிடுகின்றார்.
கிணற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக இராணுவக் காவலரண் ஒன்றும் அடிக்கடி அமைக்கப்படும்.
சில காலங்களுக்கு இருக்காது. பின்னர் மீண்டும் தோன்றும். இப்போது அந்தக் காவலரன் முற்றாகவே இல்லாமல் போய் விட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீண்ட நேரம் தொடர்ந்து நீரைப் பெற்றுக்கொண்ட போதும் கிணறு வற்றாது என பிரதேச சபையின் நீர் வண்டிச் சாரதியயொருவரும் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலிற்கு பதிலளிக்கும் போது குறிப்பிட்டார்.
ஏற்பட்ட குளறுபடிகள்
மீள்குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் இந்தச் சந்தியில் ஒரு இராணுவ காவலரண் அமைக்கப்பட்டது.
இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக இந்த குழாய் கிணற்றில் இருந்து நீரினைப் பெற்று இராணுவ முகாம்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
குழாய் கிணறுகளில் ஒரு நாளுக்கு உறிஞ்சப்படும் நீரினளவிலும் பார்க்க படையினர் உறிஞ்சி எடுக்கும் நீரினளவு அதிகமாக இருந்ததாக துறைசார் பொறியியலாளர்கள் ஒருவரின் கருத்தாக இருக்கின்றது.
ஆயினும் இராணுவத்தினர் தங்களின் தொடர்ச்சியான நுகர்வை நிறுத்திக்கொள்ளவில்லை.
இந்த வேளையில் தான் வீதியோர காவலரண்களை இராணுவத்தினர் அகற்றி வந்த போது இந்த சந்தியில் உள்ள காவலரணும் அகற்றப்பட்டது.
இந்த சூழலை பயன்படுத்தி யாரோ குழாய்க்கிணற்றினுள் கழிவு எண்ணெயை ஊற்றி விடவே குடிநீரைப் பெற முடியாத சூழல் தோன்றியிருந்தது.இராணுவத்தினர் கிணற்றை இறைத்து சுத்தம் செய்து மீண்டும் பாவிக்க ஆரம்பித்தனர்.
குழாய்க்கிணற்றின் பாதுகாப்பிற்கென மீண்டும் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டது.எனினும் இன்று காவலரணும் இல்லை.குழாய்க்கிணறும் பாவனையில் இல்லை என அப்பகுதியில் வாழும் வயோதிபர் ஒருவருடன் இது தொடர்பில் மேற்கொண்ட கேட்டலின் போது அவர் விபரித்திருந்தார்.
பயன்பாடு மிக்கதாக மாற்றலாம்
கணுக்கேணி கிழக்கு கிராம சேவகர் எல்லையிலுள்ள வரும் இந்த குழாய்க்கிணறு இப்போதும் பயன்படுத்தக் கூடியளவில் இருக்கின்றது.
கிணற்றுக்கு முன்னுள்ள காணியில் காணி உரிமையாளரால் புதிதாக வீடமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் பிரதான உள்நுழைவுப் பாதையருகே இந்த கிணறு அமைந்துள்ளது.
கிணறு அமைக்கப்பட பின்னர் தான் வீடு அமைக்கப்பட்டது. கிணற்றின் பாவனையைக் கருத்தில் எடுத்திருந்தால் அதிலிருந்து இன்னும் சற்று விலகி அமையுமாறு வீட்டின் பிரதான உள் நுழைவுப் பாதையை அமைந்திருக்கலாம் என இப்பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் சிலர் இது தொடர்பில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அவ்வாறு செயற்பட்டிருக்கும் போது இந்தக் குழாய்க்கிணற்றை பயன்பாடு மிக்க ஒரு வளமாக நீரைப் பெற்றுக்கொள்ளும் இலகுவான முறைகளை கட்டமைத்திருக்கலாம்.
விசேட நிகழ்வுகள் மற்றும் ஆலயத் திருவிழாக்கள் போன்றவற்றுக்கான நீரினைப் பெற்றுக்கொடுக்க முடித்திருக்கும். அத்தோடு வீதியின் வழியே பயணப்படும் மக்கள் நீரினைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவியிருக்கும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இப்போது குழாய்க் கிணற்றின் நீரைப் பெற்றுக்கொள்ள பொருத்தப்பட்டிருந்த மேற்பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் திறந்து விடப்பட்டுள்ளது. மிகக்குறைந்த பாவனையில் இந்தக் கிணறு இப்போது இருப்பதாக அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதுகாக்கப்பட வேண்டும்
பிரதேசமொன்றின் வளங்கள் இனங்காணப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் பிரதேச அல்லது கிராம பொது அமைப்புகள் கருத்தில் எடுப்பதோடு அதற்காக அவர்களுக்கு அவர்களின் கிராம சேவகர் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
பயன்பாடு குறைந்து செல்லும் வளமொன்றின் பேண்தகு நிலை மீண்டும் ஒரு முறை அந்த வளத்தினைப் பயன்படுத்தும் நாள் வந்தால் அது மகிழ்ச்சிக்குரிய உதவியாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
தண்ணீரூற்று கணுக்கேணியில் உள்ள இந்தக் குழாய்க்கிணறு மீளவும் மக்கள் பாவனைக்காக பொருத்தமான கட்டுமானங்களோடு பேணப்பட வேண்டும் என்பதும் அதற்கான உரிய நடவடிக்கைகளை மக்களோடு சேர்ந்து அரச உத்தியோகத்தர்கள் எடுக்க வேண்டும் என்பதும் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |