மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது மீண்டும் போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், அமெரிக்கா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் அழுத்தங்களை சந்தித்து வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இந்த சூழலில், ஈரான் அணு ஆயுதத் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை ஈரான் ராணுவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து 110 டொலரைத் தாண்டியது.
இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல் கவனம் பெற்றுள்ளது.
இந்த வாரத்திலேயே புதிய தாக்குதல்கள் தொடங்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மூன்று நாடுகளுக்கிடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.ஆனால் தற்போது நிலைமை மீண்டும் பதற்றமடைந்துள்ளது.
அவசர போர் திட்டங்கள்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்று வருவதாகவும், ஈரான் மீது எவ்வகையான தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வார இறுதியில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனையில் ஈரானின் எரிசக்தி நிலையங்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ இலக்குகளைத் தாக்கும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பென்டகன் அதிகாரிகள் அவசர போர் திட்டங்களையும் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகளை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் சிறப்பு படை நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க வீரர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்பதால், அதற்கு உள்நாட்டு எதிர்ப்பும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ஈரான் கடந்த ஒரு மாதமாக தனது ஏவுகணைத் தளங்களை வலுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்
குறிப்பாக ஹார்முஸ் நீரிணை அருகிலுள்ள 33 ஏவுகணைத் தளங்களில் 30 இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையாக கருதப்படுகிறது.
உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாக நடைபெறுவதால், அங்கு ஏற்படும் பதற்றம் உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் நிலவுகிறது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் உலக நாடுகளில் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மூலமாக மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை எந்த முக்கிய முன்னேற்றமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி மீண்டும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam