புதிய சுற்றுலாப் பாதையை அறிமுகப்படுத்தி நடைபயணம்
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய சுற்றுலாப் பாதை (Trail) ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், உள் வீதிகள் வழியாக பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நடைபயணத்தின் அடுத்த கட்டம் நேற்யை தினம் ஹற்றன், கொட்டகலை பகுதியிலிருந்து ஆரம்பமானது.
இதுவரை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்காத, மறைந்துள்ள அழகிய இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை உள்ளடக்கி இந்த புதிய பாதையை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
பிரித்தானிய சுற்றாடல் ஆர்வலரான ஆரோன் மூர் (Aaron Moore), பிரெஞ்சுக் குடிமகனான ஜேம்ஸ் மற்றும் இலங்கை இயற்கை வழிகாட்டியான சரத் விஜேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடைபயணம்
கடந்த (01) ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம், கடற்கரையோரமாக குச்சவெளி, ரிடிகல, சீகிரியா மற்றும் நக்கில்ஸ் (Knuckles) வழியாக 456 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து அண்மையில் கண்டியை சென்றடைந்தது.

அங்கு அவர்களை வரவேற்பதற்காக கண்டி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு, கண்டி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
06 வாரங்களுக்குள் மொத்தம் 750 கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதே இந்த பயணத்தின் இலக்காகும்.
கலாச்சார பன்முகத்தன்மை
இதற்கமைய, (27) ஆம் திகதி கொட்டகலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம், இனிவரும் நாட்களில் பொகவந்தலாவ, சிங்கராஜ வன வழியாக சென்று தெற்கு கடற்கரையான தேவேந்திரமுனையை அடைந்து நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை வந்த பயணத்தில் இலங்கையின் இயற்கை அழகையும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கலாச்சார பன்முகத்தன்மையையும், அவர்களின் சிறந்த மனிதநேயப் பண்புகளையும் தம்மால் சிறப்பாக அனுபவிக்க முடிந்ததாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஆரோன் மூர் தெரிவித்தார்.
குறிப்பாக கிராமமக்களிடமிருந்து கிடைத்த அரிய விருந்தோம்பலை தம்மால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.