சிறப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள VVIP - பெல் 412 உலங்குவானூர்தி
திருகோணமலை மாவட்டம், மூதூர் உள்ளிட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு நிவாரணப் பொருட்கள் இன்று (01) பெல்–412 வகை உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டன.
சாதாரணமாக VVIP பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பெல்–412 உலங்குவானூர்தியை, தற்போதைய அவசரநிலையை முன்னிட்டு இலங்கை விமானப்படை நிவாரண நடவடிக்கைகளுக்காக விசேடமாக பயன்படுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலங்குவானூர்தி மூலம் மூன்று கட்டங்களாக நிவாரண சரக்குகளை அனுப்ப இலங்கை விமானப்படை திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம் இன்று திருகோணமலை – மூதூர் அல்–ஹிலால் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நிவாரணப் பொருட்களுடன் உலங்குவானூர்தி பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உலருணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அடங்கியிருந்தன. அதிகாரிகள், தொடர்ச்சியாக மேலும் இரு கட்ட நிவாரண சரக்குகள் விரைவில் வானூர்தி மூலம் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |