ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை! விஜேதாச ராஜபக்ச அதிருப்தி
இலங்கையில் வர்த்தகர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையில் வர்த்தகர்களினால் மேற்கொள்ளப்படும் ஏமாற்று, மோசடி நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருக்கின்றனர்.
பொருளாதார ரீதியான சரிவு
அரசியல் செல்வாக்கைக் கொண்ட வர்த்தகர்கள் தான் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறானவர்கள் தான் அந்நிய நாடுகளின் ஆபத்தான கழிவுகளை இந்நாட்டில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். ஒவ்வொரு தடவையும் இதுபற்றி நாங்கள் பேசுவது மட்டும்தான். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கடந்த 2007ம் ஆண்டிலும் நான் 300 பில்லியன் ரூபா மோசடி சம்பவம் ஒன்று தொடர்பாக ஆதாரங்களை முன்வைத்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறான செயற்பாடுகள் மூலமாகவே இந்த நாடு இன்று பொருளாதார ரீதியான சரிவைச் சந்தித்துள்ளது.
அதன் காரணமாகவே பொதுமக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். எனவே இந்த நிலைகளில் மாற்றம் வேண்டும். அது தொடர்பான சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உபகுழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
