விஜயகுமாரதுங்க- ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை: விசாரணை அறிக்கைகளையும் வெளிடுமாறு கோரிக்கை
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதை போன்று அரசாங்கம் விஜயகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பான அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
யார் படுகொலையாளிகள் என்பதை மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம் (13) நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் தயார்படுத்தல் பணிகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். பொதுஜன பெரமுனவுக்கான கேள்வி அதிகளவில் காணப்படுகிறது. கடினமான நிலையில் தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்துக்கு செல்வதில் எவ்வித பாதிப்பும் கிடையாது,. நாங்கள் கிராமத்துக்கு செல்ல முடியாது என்று குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி தான் இன்று கிராமத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பட்டலந்த விவகாரம் தொடர்பில் நாங்களும் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அதேபோன்று விஜேகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு
அப்போது யார் மனித படுகொலையாளர்கள் என்பதை மக்கள் அறிந்துக்கொள்வார்கள். உண்மையை மக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை அபிவிருத்தி செய்தார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தது.
இறுதியில் நாடு தேசிய பாதுகாப்பில் பலவீனமடைந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa)மீதும் கடந்த அரசாங்கங்கள் மீதும் மக்கள் மத்தியில் வெறுப்பினை விதைத்தே ஆட்சிக்கு வந்தார்.
மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகள் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
