இன்று முதலமைச்சராகும் விஜய்.. 60 ஆண்டுகால திராவிட கோட்டை தகர்ப்பு!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றமாக, திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் பெரும் இழுபறி நீடித்தது.
ஆளுநருடன் நான்கு முறை சந்திப்பு, கூட்டணி கட்சிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தை என கடந்த ஒரு வாரமாகத் தமிழக அரசியல் களம் போர்க்களமாகக் காட்சியளித்தது.
விஜயின் வெற்றியைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக திரைமறைவில் கைகோர்க்க முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
நிபந்தனையற்ற ஆதரவு
ஆட்சி அமைக்க இன்னும் 2 இடங்களே தேவைப்பட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை மாலை வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவு, அனைத்தையும் தலைகீழாக மாற்றியது.

காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் முஸ்லிம் லீக் என 120 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் விஜய் பலமான நிலையை எட்டினார். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய்க்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ள அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.
பதவியேற்ற கையோடு, வரும் புதன்கிழமைக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ஆளுநர் விதித்துள்ளார்.
இதனால், பதவியேற்பு விழா முடிந்த கையோடு விஜய்யின் கவனம் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பை நோக்கித் திரும்பியுள்ளது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam