வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video)
நாடளாவிய ரீதியில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (20.04.2023) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், முல்லைத்தீவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் (20.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் இன்று (20.04.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் “வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என்ற பதாகையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
வலியுறுத்தப்பட்ட விடயம்
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கீத்தன்
திருகோணமலை
மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர சபைக்கு முன்னாள் இன்றைய தினம் (20.04.2023) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தை “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதே, மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டங்களை உருவாக்காதே, அச்சமின்றி வாழவிடுங்கள், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுங்கள், மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதீர்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு
கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அப்துல்சலாம் யாசீம்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (20.04.2023) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கிளை ஏற்பாடு செய்திருந்த இக்கவன ஈர்ப்பு போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும், உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் இலங்கத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை அரசே வரியை அறவிட்டு ஏழை வயிற்றில் அடியாதே, பாழடைந்த வீதியை உடனே திருத்து, அரசே மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்காதே, எமது மண் வளத்தை விற்று வயிறு வளர்க்காதே, படகுப் பாதையில் கட்டணம் அறவிடு செய்வதை உடன் நிறுத்து, உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- வடிவேலு சக்திவேல்
வவுனியா
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு பெண்களால் வவுனியா பத்தினியார்மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தனிச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்காதே' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டுள்ளது.
- வசந்தரூபன்
மன்னார்
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை எதிர்த்து மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பின் கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை இன்றைய தினம் (20.04.2023) முன்னெடுத்துள்ளார்.
குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு குறித்த நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி குறித்த பெண்கள் அமைப்பினரால் அறிக்கை ஒன்றும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.
- லம்பார்ட்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (20.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆர்ப்பாட்டகார்களால் நடத்தப்பட்டுள்ளது.
- தம்பித்துரை பிரதீபன்
அம்பாறை
இலங்கையில் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வேண்டாம் என்று கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளது.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இன்றைய தினம் (20.04.2023) இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்துச் சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்று முழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
