இலங்கை அபிவிருத்திக்கு கரம் கொடுக்கும் வியட்நாம் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த ஜனாதிபதி
புவியியல் ரீதியாக வியட்நாமும் இலங்கையும் தொலைவில் அமைந்திருந்தாலும், எமது வரலாறு, கலாசாரம் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகள் மிகவும் நெருக்கமானவை என வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) தெரிவித்துள்ளார்.
இன்று(08.05.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே, வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாமில் வெசாக் தினக் கொண்டாட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல், பொருளாதார மீட்பு மற்றும் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அதன் மூலம் பெற்றுள்ள அடைவுகளையும் நான் பாராட்டுகிறேன்.
நாகரிகத்தின் நீண்டகால பாரம்பரியம், இந்துசமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய அமைவிடம், மக்களின் உறுதிப்பாடு மற்றும் தலைவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சமிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்பது எமது நம்பிக்கையாகும்.
வியட்நாம் மக்களின் வரலாற்று நினைவுகளிலும் இதயங்களிலும் இலங்கைக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. ஜனாதிபதி ஹோ சி மின் தனது புரட்சிகரமான செயல்பாட்டுக் காலத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் இங்கு தங்கியிருந்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட அவரது உருவச்சிலை, இலங்கை மக்கள் வியட்நாம் மக்கள் மீது வைத்துள்ள அன்பின் அடையாளமாக மாறியுள்ளது. வியட்நாம் மக்களுக்கு இது ஒரு தேசியத் தலைவரின் சுதந்திரப் போராட்டப் பயணம் மட்டுமல்ல, சுதந்திரம், அமைதி, மனிதநேயம் மற்றும் நீதியை மதிக்கும் இரு நாடுகளின் இயல்பான சந்திப்பாகும். ஜனாதிபதி ஹோ சி மின் ஒருமுறை கூறியது போல் "நாடு சுதந்திரம் பெற்றாலும் மக்கள் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாவிட்டால், அந்த சுதந்திரத்தால் பயனேதுமில்லை." இந்த சிந்தனை, சுதந்திரமான, அமைதியான மற்றும் வளமான நாட்டை விரும்பும் உங்கள் மக்களின் அபிலாஷைகளுடன் மிகச் சரியாகப் பொருந்திப் போகிறது.
புவியியல் ரீதியாக வியட்நாமும் இலங்கையும் தொலைவில் அமைந்திருந்தாலும், எமது வரலாறு, கலாசாரம் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகள் மிகவும் நெருக்கமானவை.

இரு நாடுகளுமே நீண்டகாலப் பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதுடன் கருணை, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மதிக்கின்றன.
பௌத்த மதமும் கீழைத்தேய கலாசார விழுமியங்களும், ஒழுக்கநெறி, அமைதி, சகோதரத்துவம், கூட்டுமுயற்சி மற்றும் மனிதநேயத்தை வளர்ப்பதற்கு பங்களிப்புச் செய்துள்ளன. 1970 ஜூலை 21 அன்று இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்த நாள் முதல், அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் எமது உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன.
கடந்த ஆண்டு எமது உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடியதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் செய்து ஹோ சி மின் நகரில் நடைபெற்ற சர்வதேச வெசாக் கொண்டாட்டத்திலும் பங்கேற்றார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி
அத்துடன், அபிவிருத்தி என்பது மிக வேகமாக மாறிவருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், காலநிலை மாற்றம், விநியோக சங்கிலி மாற்றங்கள், மூலோபாயப் போட்டிகள் நாடுகளுக்கு வாய்ப்புகளையும் அதே வேளையில் சவால்களையும் உருவாக்குகின்றன.
சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் எமது இலக்குகளை நனவாக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கே உரிய வரலாறு, கலாசாரம், வளங்கள் மற்றும் தெரிவுகள் உள்ளன.
நாங்கள் பயணித்த பாதையில் அடைந்த வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் திறந்த மனதுடன் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள்.

எமது நீண்டகால உறவுகளைப் பற்றி பேசுகையில், இலங்கையுடன் மிகவும் ஆழமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் பயனுள்ள ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எமது அரசியல் நம்பிக்கை, பாரம்பரிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான உறவு ஒரு விரிவான பங்களிப்பாக உயர்ந்துள்ளது என்பதை உங்கள் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது அரசியல், பொருளாதாரம், முதலீடு, விவசாயம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளில் பன்முகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குகிறது.
இருப்பினும், தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், காலநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற பல புதிய சவால்கள் எமக்கு முன்னால் இருப்பதை நாம் அறிவோம். அபிவிருத்தி என்பது ஒரு தொடர்ச்சியான பயணமாகவே பார்க்கப்படுகிறது என்றார்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam