சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை
முன்னாள் அரச புலனாய்வுச்சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் உள்ள மிக இரகசியமான உளவுத்தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காக டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஆபத்தான சூழலிலும், நாட்டின் தேசிய பாதுகாப்பைச் சுரேஷ் சலே இதுவரை காட்டிக்கொடுக்காமல் இருப்பது பெருமையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு சம்பவம்
“கடந்த காலங்களில் இடம்பெற்ற மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு சம்பவத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த இரகசிய தகவல்கள் திட்டமிட்டு வெளியானதன் பின்னர், வடக்கிலிருந்து எமது இராணுவத்திற்கு துல்லியமான உளவுத்தகவல்களை வழங்கிய தகவல் வழங்குநர்கள் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அதனுடன் தொடர்புடைய எமது படை அதிகாரிகளும் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, சுரேஷ் சலேவிடம் உள்ள முக்கிய உளவுத் தகவல்களை பெற வேண்டுமாயின், அதற்குரிய முறையான நீதிமன்ற உத்தரவைப்பெற்று மட்டுமே பெற வேண்டும்.
ஏனெனில், நீதிமன்ற உத்தரவை எவராலும் அவ்வளவு எளிதாக மீறவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ முடியாது. சுரேஷ் சலே என்பவர் எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு பயங்கரவாதி அல்லர்.
இலங்கையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அளப்பரிய ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகபூர்வப் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை வகித்த ஒரு மிகச் சிறந்த பாதுகாப்பு அதிகாரி ஆவார்.
ஒட்டுமொத்த நாட்டிற்கு பேரழிவு
தற்போதைய சூழலில் அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்துவதை அரசாங்கமும் விசாரணைப் பிரிவினரும் தவிர்க்க வேண்டும்.
சுரேஷ் சலேவின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றில் உள்ள அதிரடி தகவல்களை ஏதேனும் ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி பகிரங்கப்படுத்தினால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரழிவாகவும் ஆபத்தாகவும் முடியும்.
சில வேளைகளில், தங்களுக்குக் கிடைக்கும் கட்டுக்கடங்காத பணத்திற்காக அந்த உளவுத் தகவல்களை டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இங்கு இல்லாமல் இல்லை.

இதன் காரணமாகவே, உரிய நீதிமன்ற உத்தரவைப்பெற்று, மிகவும் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரியிடம் மட்டுமே அந்த சாதனங்களை ஒப்படைக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
அவ்வாறு சட்டரீதியாக முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அனைத்து தகவல்களையும் விசாரணை அதிகாரிகளுக்கு சுரேஷ் சலே வெளிப்படுத்துவார் என நாம் முழுமையாக நம்புகின்றோம் என்றார்.
வெனிசுலாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை உயர்வு - சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு