தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர் பரிந்துரை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக (South Eastern University) உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் பேராசிரியர் கொலின் என் பீரிஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஒன்றுகூடல் நிகழ்வானது இன்று (29.04.2024) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள கல்வி நிலையமொன்றில் நடைபெற்றுள்ளது.
பேரவையால் பரிந்துரை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவு கோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரும், இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம்.றஸ்மிமும் மூன்றாவதாக பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் (09.08.2024) திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி மாதம் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழு பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி ஆறாவது உபவேந்தராக நியமிக்கவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
