கப்பல்களுக்கு ரெட் அலர்ட்! உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க இராணுவத்தின் எச்சரிக்கை
ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஈரான் துறைமுகங்களை நோக்கிய கப்பல் போக்குவரத்தை முடக்கும் தனது திட்டத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) கப்பல் மாலுமிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பை சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் எந்தவொரு நாட்டு கப்பலும் அமெரிக்கப் படைகளால் இடைமறிக்கப்படும் (Interception), பலவந்தமாகத் திசைதிருப்பப்படும் (Diversion) அல்லது முழுமையாகக் கைப்பற்றப்படும் (Capture) என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட பதற்றம்..
இந்த முற்றுகையானது ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஈரானுக்குச் சம்பந்தமில்லாத பிற நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று இரவு 7:30 மணி முதல் இந்த முற்றுகை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்தப் பிராந்தியத்தில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ஈரானின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்தே இந்தப் பதற்றம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.