வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு
வவுனியா(Vavuniya) வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) மனு ஒன்றினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்(K. Kader Masthan) ஊடாக கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(26.05.2024) இடம்பெற்ற கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்த நிலையில், குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து மனு ஒன்றினை கையளித்து தமது பிரச்சனை தொடர்பில் கலந்துரையாட முயற்சித்துள்ளனர்.
இருப்பினும், பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளே சென்று ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதனையடுத்தே, குறித்த ஆசிரியர்கள் தமது மனுவை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக ஜனாதிக்கு கையளித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள்,
“வவுனியா வடக்கு பகுதியில் முன்பள்ளி ஆசிரியர்களாக நாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம்.
எமக்கான உதவிக் கொடுப்பனவான 6 ஆயிரம் ரூபாய் என்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போதுமானதாக இல்லை.
மாத சம்பளம் 60 ஆயிரத்திற்கு மேல் பெறுபவர்களே தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில், நாம் 6,000 ரூபாய் சம்பளத்துடன் எப்படி வாழ முடியும்.
எமக்கான சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதுடன், ஏனைய அரச சேவை போல் முன்பள்ளி ஆசிரியர்களையும் நிரந்தமாக அரசாங்க சேவைக்குள் உள்வாங்க வேண்டும்.
கோரிக்கை மனு
முன்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அவை மேம்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், முன்பள்ளிகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து அரச கட்டமைப்புக்களாக அவை மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறான பல விடயங்களை உள்ளடக்கி மனு ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்க வந்திருந்தோம்.
ஜனாதிபதி இதனை கவனத்தில் கொண்டு நல்லதொரு தீர்மானத்ததை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |