வவுனியா வடக்கு தவிசாளர் வெளியிட்ட கருத்து குறித்து பிரதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு, நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக நேற்று (05.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனவாத ரீதியாக வெறுப்பு
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நான் வவுனியாவில் பிறந்து, வளர்ந்தவர். இது வவுனியா மக்களுக்கு நன்கு தெரியும். குறித்த தவிசாளருடன் எனக்கு தனிப்பட்ட எந்த கோபமும் இல்லை. அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறி சென்றவுடன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதாவது கூட்டத்தில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இனவாத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்தார். மேடையில் வைத்து அவரை அவமானப்படுத்தியதாகவும் அதனை விட்டு இறங்குமாறு நான் கூறியதாகவும் அவர் பதிவிட்டார்.
கோரிக்கை
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு கூற்று. நடந்த சம்பவத்தை கூறாமல் இல்லாத ஒன்றை திரிபுபடுத்தியிருந்தார்.

இது தொடர்பாக எனது கட்சியின் ஆலோசனையின் படி ஆளுநரிடம் ஒரு முறைப்பாட்டை செய்திருக்கின்றேன்.
எனது கோரிக்கை என்னவென்றால் நான் அவரை அவமதித்துள்ளதாகவோ அல்லது மேடையில் இருந்து இறங்க சொன்னேன் என்று கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.