வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் தடுப்பூசி பணிகள்
கோவிட் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைசர் கோவிட் தடுப்பூசியானது நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், அடுத்த கட்டமாக வட மாகாணத்தில் 16, 17 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியானது ஒருதடவை மாத்திரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 16 தொடக்கம் 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.
இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு 16 தொடக்கம் 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையினை அன்றைய தினத்தில் தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் பிரதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் தரம் 11 மற்றும் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பைசர் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையும் , திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமையும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
எனவே நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 11
மற்றும் தரம் 12 மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு,
தங்களுக்கு உரிய நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறும் , அத்துடன் 18 வயதிற்கு
குறைந்த மாணவர்கள் பெற்றோரினால் சம்மதம் வழங்கும் விண்ணப்பத்தினை அதிபரிடம்
பெற்று , அதனை பூரணப்படுத்திக்கொண்டு சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.