ஈரானின் புதிய ஜனாதிபதியை நியமிக்க அமெரிக்கா - இஸ்ரேல் இரகசிய திட்டம்: வெளியான பரபரப்பு தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போரின் பின்னணியில், அந்நாட்டின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தை அகற்றிவிட்டு, தீவிரப்போக்குடைய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜாடை புதிய தலைவராக அமர வைக்க இரகசியத் திட்டம் தீட்டியிருந்ததாக 'தி நியூயோர்க் டைம்ஸ்' நாளிதழ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் ஜனாதிபதி மதுரோவுக்குப் பிறகு டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராகக் கொண்டு வந்த அதே பாணியை ஈரானிலும் செயல்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.
கடுமையான முரண்பாடு
ஆனால், இந்த அதிரடித் திட்டம் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அஹமதிநெஜாட் எங்கு இருக்கிறார், என்ன நிலையில் இருக்கிறார் என்ற விபரங்கள் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அரசியல், சமூக மற்றும் இராணுவச் சூழலைக் கையாளும் திறன் கொண்ட ஒருவரை ஈரானுக்குள்ளிருந்தே கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் விரும்பியுள்ளார்.
2005 முதல் 2013 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்த அஹமதிநெஜாட், "இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறிவோம்" என்று முழங்கியவர், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் தீவிர ஆதரவாளர் மற்றும் அமெரிக்காவின் கடுமையான விமர்சகர் என்பதால் இவரைத் தேர்ந்தெடுத்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அஹமதிநெஜாட் சமீபகாலமாக கமேனி தலைமையிலான ஈரானிய அரசுடன் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஈரானின் புதிய ஜனாதிபதி
இதற்கிடையே, கடந்த 2019 நேர்காணல் ஒன்றில் அவர் ஜனாதிபதி ட்ரம்பை ஒரு "செயல்வீரர்" மற்றும் சிறந்த தொழிலதிபர் என்று பாராட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவு குறித்துப் பேசியிருந்ததும் இந்தத் திட்டத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அவரை வீட்டுக்காவலில் இருந்து விடுவிப்பதற்காக, போரின் முதல் நாளன்று தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

ஒரு சிறை உடைப்பு நடவடிக்கை போல திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதலில் அஹமதிநெஜாட் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தங்களை விடுவிக்கவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது என்பதை அவர் உணர்ந்திருந்த போதிலும், இந்த வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு ஆட்சி மாற்றத் திட்டத்தில் அவருக்கு இருந்த விருப்பம் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்காவலில் இருந்து தப்பிய அஹமதிநெஜாட், மேற்கத்திய நாடுகளின் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவதை நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அஹமதிநெஜாடின் நெருங்கிய சகாக்கள் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பதாகவும் ஈரானிய அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam