நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி செயலிழப்பு: ட்ரம்ப் கொடுத்த விளக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, நேற்று(31) நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி அளவில் முடங்கியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே குடியேற்றக் கொள்கை (Immigration Policy) தொடர்பாக ஏற்பட்ட மோதலே இந்த முடக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
முடக்கத்திற்கான காரணம்
மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் அண்மையில் பெடரல் அதிகாரிகளால் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) என்ற அமெரிக்கக் குடிமகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், குடியேற்ற நடைமுறையாக்கப் பிரிவினருக்கு கூடுதல் நிதி வழங்க ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்படி, அதிகாரிகள் முகக்கவசம் அணிய தடை விதித்தல், உடல் பொருத்து கெமராக்களைக் கட்டாயமாக்குதல் போன்ற புதிய விதிகளைக் கொண்டு வந்தால் மட்டுமே நிதி சட்டமூலத்துக்கு ஆதரவு தருவோம் என்று அவர்கள் பிடிவாதம் பிடித்ததால் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் பாதிப்பு
இந்த முடக்கத்தால் சுமார் 8 லட்சம் அரச ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி மற்றும் திறைசேரி ஆகிய துறைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அஞ்சல் சேவை, ராணுவம் மற்றும் அவசரக்கால மருத்துவச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம், ஆனால் அவை இன்னும் முறைப்படி சட்டமாக்கப்பட வேண்டும். இந்த முடக்கம் மிகக் குறுகிய காலமே நீடிக்கும்" என்று ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கூடும்போது, தற்காலிகமான நிதி ஒதுக்கீடு குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அரச முடக்கம் என்பதும், 2025-இல் ஏற்பட்ட 43 நாட்கள் நீடித்த முடக்கமே அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.