ஈரான் அணிக்கு ஆதரவு: ஜப்பான் கால்பந்து வீரரின் வாய்ப்பை ரத்து செய்த அமெரிக்கா
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் நாடு பங்கேற்க வேண்டும் என கருத்து தெரிவித்ததற்காக, ஜப்பான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெய்சுகே ஹோண்டா பெரிய அமெரிக்க நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தை இழந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் என்று எனக்குத் தெரியும், ஆனால் தனிப்பட்ட முறையில் ஈரான் அணி உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விளம்பரத்தை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றமான சூழலில், ஹோண்டாவின் இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஹோண்டாவின் இந்த பதிவைத் தொடர்ந்து, அவருடன் விளம்பர ஒப்பந்தம் செய்யவிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று, அந்த ஒப்பந்தத்தை திடீரென இரத்து செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"உண்மையான சாராம்சத்தைப் புறக்கணித்து, குறுகிய நோக்கில் முடிவெடுக்கும் நிறுவனங்களுடன் எனக்குத் தொடர்பிருக்கத் தேவையில்லை" என்று ஹோண்டா அந்த நிறுவனத்தைச் சாடியுள்ளார்.
ஜப்பான் அணிக்காக 2010, 2014 மற்றும் 2018 ஆகிய மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள ஹோண்டா, ஆசிய கால்பந்து உலகில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.
விளையாட்டு வீரர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு சர்வதேச விவாதத்தைத் தூண்டியுள்ளது.