அமெரிக்க தூதுவருக்கு பிரியாவிடை: பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் தாயகம் திரும்புகின்றார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அவர் நேற்று வியாழக்கிழமை பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.
மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினர். டித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிக்காக அமெரிக்க அரசுக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
தூதுவரின் சிறப்பான பங்களிப்பு
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தூதுவரின் சிறப்பான பங்களிப்புக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.
அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுசும் இதில் பங்கேற்றிருந்தார்.




பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam