மன்னார் மாவட்ட மக்களை பாதுகாத்து கொள்வது தொடர்பாக அவசர கலந்துரையாடல்
இந்தியாவில் இடம்பெற்று வருகின்ற அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இவ்வாறான சம்பவம் ஏற்படாத விதத்தில் அனைவரும் இணைந்து சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின்பற்றி மாவட்ட மக்களையும், மாவட்டத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட மக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும், முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் நேற்று மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் சுகாதாரத் துறையினர், பொலிஸ், இராணுவம், கடற்படை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், அரச தனியார் போக்குவரத்து பிரதி நிதிகள், வர்த்தக சங்கம் உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் மாவட்ட ரீதியாக எவ்வாறான நடை முறைகளைக் கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் குறிப்பாக தற்போது மாகாணங்களுக்கு இடையே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய தேவைகள் அடையாளம் கண்டு, அவர்கள் வெளி மாகாணங்களுக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான 'பாஸ்' நடை முறைகள் தொடர்பாகவும் நாங்கள் இன்றைய தினம் (செவ்வாய்) கலந்துரையாடி உண்மையில் அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு மாத்திரமே அத்தியாவசிய சேவைக்கான பாஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புதிது புதிதாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வது தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அத்தோடு மீனவர்கள் கட்டாயம் தமது கைகளில் வழங்கப்படும் பாஸ் வைத்திருக்க வேண்டும் எனக் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மன்னார் மாவட்ட மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் போது பாஸ் கொண்டு செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோடு, மீனவர்கள் தொடர்ச்சியாகச் சோதனைக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மீனவர்கள் பாஸினை கொண்டு செல்வது கட்டாயம். மேலும் மன்னார் மாவட்டத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகள் நாளைய தினம் புதன் கிழமை அதிகரிக்கப்படும். குறிப்பாக முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள், சுகாதார நடை முறைகளை பின் பற்றாதவர்கள், போக்குவரத்து நடைமுறைகளைப் பேணாதவர்கள் ஆகியோருக்கு கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வர்த்தக நிலையங்கள் அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்கக்கூடிய வகையிலும், கிராமங்களில் நடமாடும் சேவைகளை மேற்கொள்ளும் வகையிலும் நாங்கள் கலந்துரையாடி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
வங்கி நிர்வாகம் தமது வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய விதத்தில் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
அதே போன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள வியாபார நிலையங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்து, அவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொருட்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் எவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் மக்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லை என்றால் நாங்கள் இந்த அபாயத்திலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வது பாரிய சவாலாக இருக்கும்.
ஒவ்வொரு தனி நபர்களும் தனதும், தனது குடும்பத்தினதும், சமூகத்தினதும்,
நாட்டினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் இடம் பெற்று வருகின்ற
அபாயகரமான சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இவ்வாறான சம்பவம்
ஏற்படாத விதத்தில் அனைவரும் இணைந்து சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின்பற்றி மாவட்ட மக்களையும், மாவட்டத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும் என
அனைவரிடமும் கோரி நிற்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.