மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர்: சிவப்பிரகாசம் (Photos)
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்க்கொண்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று (07.10.2022) நடைபெற்ற தெளிவூட்டல் நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மலையக பிரதேசத்தில் போசாக்கு மட்டமானது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. அதற்கு அமைவாக 6 பிரதேசங்களில் மனித அபிவிருத்தி தாபனம், போசாக்கு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
போசாக்கு மட்டத்தை விருத்தி செய்யும் வேலைத்திட்டம்
இதில் பாலர் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் போன்றவர்களின் போசாக்கு மட்டத்தை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கொட்டகலை, நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
உணவுப் பிரச்சினை
உணவுப் பிரச்சினைக்கு தீர்வாக விவசாயம் ஊக்குவிக்கப்படுகின்றது. இதன்போது வீட்டு தோட்டம் செய்ய விதைகள், கன்றுகள் என்பன வழங்கப்படுகின்றன.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறார்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் விதுர சம்பத் கலந்து கொண்டதோடு, பிரதேச கிராம சேவகர்கள், பெருந்தோட்ட மனிதவள
அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







