விவசாயத் துறையை நவீனமயப்படுத்த திட்டம்: ஜனாதிபதி ரணில் உறுதி
விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவு படுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(07.01.2024) இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்தல்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால் பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவதே ஆகும்.
அந்த வகையில் வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக வடக்கிற்கு நான் வருகை தரும் போதெல்லாம் பிரச்சனை தொடர்பில் வினவும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் தீர்வு என ஒரு சில பிரச்சனைகளுடன் மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள்.
அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கான வழி தொடர்பில் தான் நான் ஆராய்கின்றேன்.
குறிப்பாக விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவு படுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம் ஆகும்.
அத்துடன் வெளிநாடுகளில் எவ்வாறு மின்சாரத்தினையும் இயற்கை வளத்தினையும் பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றார்கள். அல்லது விவசாய உற்பத்திகளை எவ்வாறு நவீன முறையில் உற்பத்தி செய்கின்றார்கள் போன்றவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.
எனவே எதிர் வரும் காலங்களில் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயரக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





