வழக்குகளில் இருந்து தப்பிக்க ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் - சமீர பெரேரா கடும் சாடல்
இலங்கை மக்கள் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்த காலத்தில் ஒன்றாக இணையாத எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஒன்று கூடுகின்றன என்று இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், "முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அவசியப் பொருள்களுக்காக நீண்ட வரிசைகளில் நின்று கடும் துன்பங்களை எதிர்கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்
மாணவர்கள் ஓட்டோக்களில் அமர்ந்து வீட்டுப்பாடங்களைச் செய்யும் அளவுக்கு நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், அந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்கவோ அல்லது ஒன்றாக இணைந்து செயற்படவோ இந்த அரசியல்வாதிகள் முன்வரவில்லை.

தற்போது எதிர்க்கட்சியினர் திடீரென ஒன்றுகூடுவது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்ல. மாறாகத் தங்களின் சுய அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே ஆகும்.
அண்மையில் இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்ட நடவடிக்கை மற்றும் சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பாதிப்பேர் சிறை செல்லும் கட்டத்தில் உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் சிறையில்தான் மீண்டும் சந்திக்க நேரிடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.