ரஷ்ய தலைநகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் : பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் முக்கிய தொடருந்து நிலையங்களில் ஒன்றான சவ்யோலோவ்ஸ்கி (Savyolovsky) நிலையத்திற்கு அருகே நேற்று(24)அதிகாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் தாக்குதல்தாரி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12:06 மணியளவில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரின் வாகனத்திற்கு அருகே வந்த நபர் ஒருவர், தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழு
இந்தத் தாக்குதலில் வாகனத்திற்குள் இருந்த மற்ற இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு, சட்ட அமுலாக்க அதிகாரி மீதான கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத வெடிமருந்து வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தாக்குதலின் தாக்கத்தால் பொலிஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், அதன் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளன.
எனினும், வாகனம் தீப்பிடிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் அல்லது அவரது நோக்கம் என்ன என்பது குறித்து ரஷ்ய உள்துறை அமைச்சகம் இதுவரை அதிகார பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடையும் அதே நாளில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது கடந்த சில வாரங்களாக மொஸ்கோவில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
தற்போதைய இந்தத் தாக்குதல் மொஸ்கோவில் மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள்! ஆபத்து வலயத்திற்குள் இலங்கை