ஷஹித் டிரோன்களை பயன்படுத்தி உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்
தானிய ஏற்றுமதிக்காக உக்ரைன் பயன்படுத்திவந்த ஒடெஸா துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் வழங்கிய ஷஹித் டிரோன்களை பயன்படுத்தி இவ்வாறு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு தானிய கப்பல்களை கருங்கடல் வழியாக செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதாக ரஷ்யா அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சில ஆப்ரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால், தானிய கப்பல்களை அனுமதிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான சந்திப்பின் போது வலியுறுத்துவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு நடைபெற சில மணி நேரமே இருந்த நிலையில், ஒடெஸா துறைமுகத்தில் உள்ள தானிய கிடங்குகளை குறி வைத்து ரஷ்யா 32 டிரோன்களை ஏவியதாகவும், அதில் 23 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
