நிட்டம்புவையில் வாயு துப்பாக்கியின் தோட்டா தாக்கி இரண்டரை வயதுச் சிறுமி கவலைக்கிடம்
இரண்டரை வயதுச் சிறுமியொருவரின் வயிற்றுப் பகுதியை வாயுத்துப்பாக்கி தோட்டா கிழித்துச் சென்றதில் சிறுமி கவலைக்கிடமான நிலையில் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (07.12.2022) பிற்பகல் நிட்டம்புவை அருகே பஸ்யாலை - தெமடதெனிகந்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வீட்டில் இருந்த வாயு துப்பாக்கியை எடுத்த 11 வயதுச் சிறுவன் சுவற்றில் குறிபார்த்து சூடுவைத்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
அதன்போது சுவற்றில் பட்டுத் தெறித்த துப்பாக்கித்தோட்டாவின் ஒரு துண்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுச் சிறுமியின் வயிற்றைக் கிழித்து காயப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.