சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்காக எந்தவொரு வழக்கிலும் தாம் முன்னிலையாக செயல்பட்டதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்காக வழக்கொன்றில் தாம் முன்னிலையானதாக ஊடகவியலாளர் குழுவொன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, தீய நோக்கமுடையவை மற்றும் தவறாக வழிநடத்துபவை.
சஹ்ரானுக்காக நான் வாதாடவில்லை..
தங்களை ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இந்தப் பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஒரு சந்தேக நபருக்காக முன்னிலையானதாகக் கூறுவது, தமது அரசியல் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத் தலையீடுகளையும் குறிவைத்து தமக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் ஒரு இழிவான முயற்சி என்றும் மைத்திரி குணரத்தின சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரானுக்குத் தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், அவ்வாறு தாம் சஹ்ரானுக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டிருந்தால், அந்த வழக்கு எண்ணையும் அது விசாரிக்கப்பட்ட நீதிமன்றம் தொடர்பான விபரங்களையும் வெளியிடுமாறும் அவர் சவால் விட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே, சஹ்ரானும் ஒரு சந்தேக நபராக இருந்த ஒரு வழக்கில் தாம் மற்றொரு சந்தேக நபருக்காக வாதாடியிருந்த போதிலும், அந்த சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை வழிநடத்திய சஹ்ரான் அல்ல.
தன்னை நோக்கிச் முன்வைக்கப்படும் இதுபோன்ற வெறுப்பு நிறைந்த கூற்றுகள், தமது சிவில் சமூகச் செயல்பாடுகளைத் தடுத்துவிட முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.