2 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு - விடுதலையான கைதியின் செயலால் எழுந்த பரபரப்பு..!
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவரை தீயணைப்பு படையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(13.06.2026) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் மீட்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்ட வடிகானுக்குள் சம்பவ தினமான நேற்று மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் உள் நுழைந்ததை கண்ட பொதுமக்கள் நீண்ட நேரமாகியும், அவர் வெளியில் வராத நிலையில் பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படை பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் சென்று வடிகானுக்குள் சிக்கியவரை மீட்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், தீயணைக்கும் படையினர் சுமார் 2 மணித்தியாலத்துக்கு மேல் போராட்டத்தின் மத்தியில் இரவு 7.30 மணியளவில் வடிகானுக்குள் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும், நேற்று முன்தினம்(12) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து விடுதலையானவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam