2.67 பில்லியன் ரூபா நிதி மாயம்: அடுத்தடுத்து பேரிடியை சந்திக்கும் இலங்கை அரசு
நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பனவற்றுக்கு இடையிலான கணக்கு அறிக்கைகளில் பாரியளவில் முரண்பாடு நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் குறித்த கணக்காய்வு மதிப்பாய்வை இலங்கை கணக்காய்வாளர் மா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் கணக்குகளில் 2.67 பில்லியன் ரூபா நிதி முரண்பாடு நிலவுவதாகவும், பல வெளிநாட்டுக் கடன்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2.67 பில்லியன் ரூபா நிதி முரண்பாடு
நிதியமைச்சின் அறிக்கைகளின்படி, 2026 ஜூன் மாத நிலவரப்படி இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் 98.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடன் முகாமைத்துவ அமைப்பின் ஆரம்ப இருப்பு கணக்குகளுக்கும் தற்போதைய தரவுகளுக்கும் இடையே 2.672 பில்லியன் ரூபா நிகர முரண்பாடு கண்டறியப்பட்டுள்ளது.
திறைசேரியின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், 2025 இல் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியுதவிகள், அரசாங்கத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் முதன்மைக் கடன் முகாமைத்துவ அமைப்பு ஆகிய இரண்டையுமே முற்றிலும் தவிர்த்துச் சென்றுள்ள "உயர் ஆபத்து" உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நான்கு வெளிநாட்டுக் கடன் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில், 2.01 பில்லியன் ரூபா நிதி அறிக்கைகளில் தவறாகக் கூடுதலாகக் காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கக் கணக்குகளில் எந்தவொரு பௌதீக அல்லது மூலதனச் சொத்துக்களும் குறிப்பிடப்படாத நிலையில், 518.3 பில்லியன் ரூபா அளவிலான பாரிய வெளிநாட்டுக் கடன் இருப்பு கணக்கு புத்தகங்களில் இன்னமும் காட்டப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி உதவி (RFI) மற்றும் நீடித்த நிதி வசதி (EFF) ஆகியவற்றின் கீழ் பெறப்பட்ட கடன்களைக் கணக்கிடுவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
Rebuild Sri Lanka திட்டத்துக்குள் நடக்கும் ஊழல்
மேலும், கடன் செலவுகள் மற்றும் வட்டிச் செலவுகள் சரியான கணக்கீட்டுக் காலப்பகுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கணக்காய்வில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையைக் கட்டியெழுப்பும் (Rebuild Sri Lanka) வேலைத்திட்டம், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒரு நிதி அமைப்பின்றி, திறைசேரியின் பிரதிச் செயலாளரின் கீழ் உள்ள ஒரு கணக்கின் ஊடாக முறையற்ற விதத்தில் இயங்கி வருவதாகக் கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக நிறுவப்பட்ட அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37,468 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.
இது முந்தைய காலாண்டை விட 195 மில்லியன் டொலர் பெயரளவு வீழ்ச்சியாகும். இந்தத் தரவு இடைவெளிகளையும், கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட 518.3 பில்லியன் ரூபா சொத்து முரண்பாடுகளையும் சரிசெய்வதற்காக, நிதியமைச்சும் திறைசேரியும் இணைந்து "கடன் அமைப்புகள் மற்றும் நிதி அறிக்கைகளை ஒருங்கிணைக்கும்" திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றன.
அத்துடன் 'Rebuild Sri Lanka' நிதியத்தைச் சட்டப்பூர்வமான நிதியமாக மாற்றுவதற்கான பின்னணி வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வார இறுதி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.