மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆவணங்களை திருடிய இருவருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் இருந்து வழக்கு ஆவண கோப்பு ஒன்றை திருடி அதில் இருந்த வாகன பதிவு ஆவணத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி திரும்பவும் பதிவேட்டு அறையில் வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் சந்தேகநபர்கள்
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் கடமையாற்றி வந்த சிற்றூழியர் மற்றும் மணல் வியாபாரி உட்பட இருவரையும் தொடர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த திங்கட்கிழமை திகதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த 4 ஆவணக் கோப்புக்கள் கொண்ட ஆவணங்கள் திருட்டுப் போனதையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
பொலிஸார் கண்டறிந்த விடயம்
இந்த நிலையில் திருட்டுப் போன வாகன வழக்கு தொடர்பான ஆவணக்கோப்பு அடங்கிய ஆவணங்களை அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் மணல் வியாபாரியுடன் இணைந்து அந்த வழக்கு ஆவணக் கோப்புக்களை அங்கிருந்து திருடிச் சென்று அந்த ஆவணக் கோப்பில் இருந்த ஆவணங்களை எடுத்துவிட்டு அதில் தனது பெயருக்கு மாற்றிய வாகன பதிவு ஆவணங்களை வைத்து மீண்டும் பதிவேட்டு அறையில் வைத்துள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து குறித்த ஊழியரையும் மணல் வியாபாரியையும் கடந்த மார்ச் 12ஆம் திகதி கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து அவர்களை கடந்த 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்பில் மீண்டும் வழக்கு விசாரணைக்காக கடந்த 7ஆம் திகதி நீதிமன்றில் இருவரையும் முன்னிலைப்படுத்திய போது வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் இருவரையும் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |